Freitag, November 04, 2005

விநோத வழக்கு

உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.

ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.

1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.

தகவல் - தினமுரசு.

Dienstag, November 01, 2005

பின்னணிப் பாடகி பி.லீலா மரணம்

பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.

மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற வாராயோ வெண்ணிலாவே..., வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து..., ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற அருள் தரும் தேவ மாதாவே...' இன்னும், ஓரிடந்தனிலே…, வெண்ணிலவே தண்மதியே…, ராஜா மகள் ரோஜா மலர்... போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா.

இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாடலுக்கு முதலில் பாடுவதற்காக இசையமைப்பாளரால் அழைக்கப்பட்டவர் இந்த பி.லீலா. ஆனால் தன்னைவிட இந்தப் பாடலைப்பாட ஜானகியே சிறந்தவர் என்று அப்போது பரிந்துரைததாராம் லீலா. அந்த அளவுக்கு பரந்த மனது கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்த, 76 வயதான லீலா கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.