Dienstag, Juni 17, 2008

தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்

சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி 15.6.2008 அன்று காலமானார்.

அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 15.6.2008 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.
பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

Donnerstag, Januar 17, 2008

ஓவியர் ஆதிமூலம் மரணம்

திகதி : Wednesday, 16 Jan 2008, [Sindhu]

புகழ்பெற்ற தமிழ் ஓவியர் கே.எம். ஆதிமூலம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றிரவு அவரது உயிர் பிரிந்ததாக, குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த 1938ம் ஆண்டு, துறையூர் அருகே கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆதிமூலம், சிறு வயது முதலே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் நவீன இலக்கியவாதிகள் பலருடன் ஆதிமுலத்திற்கு தொடர்பு ஏற்பட்டது.

கடந்த 1979ம் ஆண்டு லலித் கலா அகாடமி விருதைப் பெற்ற ஆதிமூலம், தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகளின் விருதையும் பெற்றுள்ளார்.

ஓவியர் ஆதிமூலத்தின் எளிய, நவீன கோட்டோவியங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கடல் கடந்து வெளிநாடுகளிலும் புகழ் பெற்று விளங்கின. கி.ராஜ நாராயணனின் 'கரிசல் காட்டு கடுதாசி' தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

Quelle - new india news