Freitag, November 04, 2005

விநோத வழக்கு

உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.

ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.

1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.

தகவல் - தினமுரசு.

Dienstag, November 01, 2005

பின்னணிப் பாடகி பி.லீலா மரணம்

பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.

மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற வாராயோ வெண்ணிலாவே..., வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து..., ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற அருள் தரும் தேவ மாதாவே...' இன்னும், ஓரிடந்தனிலே…, வெண்ணிலவே தண்மதியே…, ராஜா மகள் ரோஜா மலர்... போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா.

இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாடலுக்கு முதலில் பாடுவதற்காக இசையமைப்பாளரால் அழைக்கப்பட்டவர் இந்த பி.லீலா. ஆனால் தன்னைவிட இந்தப் பாடலைப்பாட ஜானகியே சிறந்தவர் என்று அப்போது பரிந்துரைததாராம் லீலா. அந்த அளவுக்கு பரந்த மனது கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்த, 76 வயதான லீலா கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.

Montag, Oktober 31, 2005

பழைய கணக்கீட்டு முறைகள்

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

Dienstag, Oktober 18, 2005

Panagram வாக்கியம்

Panagram என்பது A இலிருந்து Z வரையுள்ள எழுத்துக்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வாக்கியம்.

A இலிருந்து Z வரையுள்ள 26 ஆங்கில எழுத்துக்களையும் உள்ளடக்கிய வாக்கியம்
Mr.Jock, T.V. quiz PhD, bags few Lynx.

33 எழுத்துக்களுடன்
The quick brown fox jumps over a lazy dog.

32 எழுத்துக்களுடன்
Pack my box with five dozen liquor jugs.

விசிறி

Fanatic என்பதிலிருந்து மிருதுவாக்கப்பட்ட வார்த்தை Fan.
அது தமிழில் விசிறி ஆகி விட்டது

Samstag, Juni 04, 2005

றேகனின் அந்த ஒரு பார்வை

இந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் ஒன்று வந்து போகும். Alzheimer நோயினால் பீடிக்கப் பட்டு 5.6.2004இல் மரணமடைந்த அமெரிக்காவின் 40வது ஜனாதிபதியான Ronald Reagan இன் உடல் வைத்திருக்கும் பெட்டியில் முத்தமிட்டு வழியனுப்பிய, 83வயதுகள் நிரம்பிய நான்சி றீகனின் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் அப்படியே சொல்கிறது.

தான் யாரென்பதையே வருடக்கணக்காக மறந்து போயிருந்த Reagan இறக்கும் இறுதித் தறுவாயில் அவரது படுக்கையின் ஒரு பக்கம் அவரது பிள்ளைகளான Patty யும், Ronyயும் அமர்ந்திருக்க மறுபக்கம் நான்சி அமர்ந்திருந்தார்.

இறக்கும் அந்தத் தறுவாயில், மூடியிருந்த Reagan இன் விழிகள் நான்சியினை நோக்கி ஒரு கணம் திறந்து மூடியிருக்கிறது. "Reagan இன் அந்த ஒரு பார்வை எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. என் மீது கொண்ட அன்பின் நிமித்தம் தனது கண்களை, என்னை நோக்கித் திறந்து விடை பெற்றிருக்கிறார்" என்று Nancy Reagan சமீபத்திய தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

52 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் அன்பு இறுக்கமானதாகத்தான் இருக்கும்.

Dienstag, Mai 31, 2005

அப்பிளைத் தனியாக வையுங்கள்.

எல்லா மரக்கறிகளையும் அல்லது எல்லாப் பழங்களையும் ஒரே பெட்டிக்குள்ளேயோ அல்லது
ஒன்றாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயோ வைக்கக் கூடாது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தக்காளிப் பழத்துடன் சேர்த்து வைக்கப் படும் மரக்கறிகள் விரைவில் பழுதடைந்து விடுவது போல அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

காரணம் அப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு பதார்த்தம் மற்றைய பழங்களை விரைவில்பழுக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால் அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்கள் விரைவாகப் பழுத்து பழுதடைகின்றன.

Donnerstag, Mai 19, 2005

விச ஊசியா? ஈரல் தானமா?


தீர்வு எப்படி அமையும்?


அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.

40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.

மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக உருவாகியுள்ளது. கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப் பட்டிருக்கும் ஜோன்சனின் சகோதரிக்கு அவசரமாக ஒரு புதிய ஈரல் தேவைப் படுகிறது. தனது ஈரலை தனது சகோதரிக்குக் கொடுக்க ஜோன்சனும் விரும்புகிறார். அவரது ஈரல் சகோதரிக்குப் பொருந்தும் எனவும் வைத்தியர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.

மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் இவரால் தனது ஈரலை தனது சகோதரிக்குத் தானம் செய்ய முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்குமா?

விசஊசி ஏற்றப்பட்டால் இவரது அனைத்து அவயவங்களும் செயலிழந்து விடும்.
இந்த இக்கட்டில் நீதிபதி என்ன முடிவு சொல்லப் போகிறார். நாளை வெள்ளி வரை காத்திருப்போம்.

Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.