Donnerstag, Januar 15, 2009

புலோலியூர் க.தம்பையா காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

கலைமகள் நிறுவன ஆசிரியரும் தமிழ் பேரறிஞருமான கி.வா. ஜெகநாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன் சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது "ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்" என்ற சிறுகதைக்கும், நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டுநிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது "ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்" என்னும் சிறுகதைக்கும் முதல் பரிசான தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் புலோலியூர் தம்பையா எழுதிய "பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்கு பணப்பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறது. இவர் "அழியும் கோலங்கள்'', "ஐம்பதிலும் ஆசைவரும்' என்னும் இரு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவர் 1966 ஆம் ஆண்டு நிலஅளவைத்திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவியேற்று பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யாழ்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

இவரது இறுதிக்காலத்தில் பருத்தித்துறை பிரதேச சபை இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கௌரவித்திருந்தது. அதே வேளை இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக கடந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதையும் இந்துக்கலாசார அமைச்சு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிக்கிரியைகள் சொந்த ஊரான புலோலிபுற்றளையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Keine Kommentare: