Donnerstag, Januar 15, 2009

புலோலியூர் க.தம்பையா காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

கலைமகள் நிறுவன ஆசிரியரும் தமிழ் பேரறிஞருமான கி.வா. ஜெகநாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன் சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது "ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்" என்ற சிறுகதைக்கும், நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டுநிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது "ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்" என்னும் சிறுகதைக்கும் முதல் பரிசான தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் புலோலியூர் தம்பையா எழுதிய "பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்கு பணப்பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறது. இவர் "அழியும் கோலங்கள்'', "ஐம்பதிலும் ஆசைவரும்' என்னும் இரு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவர் 1966 ஆம் ஆண்டு நிலஅளவைத்திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவியேற்று பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யாழ்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

இவரது இறுதிக்காலத்தில் பருத்தித்துறை பிரதேச சபை இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கௌரவித்திருந்தது. அதே வேளை இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக கடந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதையும் இந்துக்கலாசார அமைச்சு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிக்கிரியைகள் சொந்த ஊரான புலோலிபுற்றளையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.

மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ - ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ - சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.

விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.

Jan-2009

Dienstag, Juni 17, 2008

தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்

சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி 15.6.2008 அன்று காலமானார்.

அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 15.6.2008 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏழை மக்களுக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும் ஆதரவு இல்லங்கள் அமைத்து சேவையாற்றி வந்தார்.
பல நாடுகளுக்கும் சென்று சைவ சொற்பொழிவுகள் ஆற்றியும் தனது ஆதரவு இல்லங்களுக்கு நிதி திரட்டியும் இறக்கும் வரை தனது பணியைச் செவ்வனே செய்து வந்தார்.

Donnerstag, Januar 17, 2008

ஓவியர் ஆதிமூலம் மரணம்

திகதி : Wednesday, 16 Jan 2008, [Sindhu]

புகழ்பெற்ற தமிழ் ஓவியர் கே.எம். ஆதிமூலம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றிரவு அவரது உயிர் பிரிந்ததாக, குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த 1938ம் ஆண்டு, துறையூர் அருகே கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஆதிமூலம், சிறு வயது முதலே ஓவி்யத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் நவீன இலக்கியவாதிகள் பலருடன் ஆதிமுலத்திற்கு தொடர்பு ஏற்பட்டது.

கடந்த 1979ம் ஆண்டு லலித் கலா அகாடமி விருதைப் பெற்ற ஆதிமூலம், தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகளின் விருதையும் பெற்றுள்ளார்.

ஓவியர் ஆதிமூலத்தின் எளிய, நவீன கோட்டோவியங்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கடல் கடந்து வெளிநாடுகளிலும் புகழ் பெற்று விளங்கின. கி.ராஜ நாராயணனின் 'கரிசல் காட்டு கடுதாசி' தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

Quelle - new india news

Mittwoch, Dezember 05, 2007

X-Ray - Röntgen

8.11.1895 அன்று மாலை Wilhelm Conrad Röntgen என்ற ஜேர்மனியர் எதேச்சையாகக் கண்டுபிடித்ததுதான் X-Ray(Röntgen).

ரேடியேஷன் மூலம் ஏற்படும் ஒளியை (fluorescence) சோதனைக் கூடத்தில் கண்டுபிடித்த அவர் அந்த ஒளிக்கீற்றுக்குப் பெயர் வைக்கத் தெரியாமல் X-Ray என்று அழைத்தார்.
அவர் முதலில் எடுத்த X-Rayயே ஜோராக இருந்தது. அது,மோதிரம் அணிந்துகொண்டிருந்த அவரது மனைவியின் கை விரல்கள்!

மருத்துவ உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று எக்ஸ்-ரே! catஸ்கேன் 1975ஆம் ஆண்டிலும், அதைவிடச் சக்தி வாய்ந்த MRIஸ்கேன் 1983ஆம் ஆண்டிலும் புழக்கத்துக்கு வந்து விட்டன என்றாலும் எக்ஸ்-ரே சாகாவரம் பெற்று இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது..!

Mittwoch, Oktober 31, 2007

நானூறு வயதான சிப்பி

சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் 'மிங்' பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்து கொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்ஸ்பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார். இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார்.

இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது. இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப் பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிஸ் ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

Quelle:http://bsubra.wordpress.com/2007/10/30/longest-lived-animal-found-clam-405/

Mittwoch, September 26, 2007

பழக்க வழக்கங்கள்

தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?
சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.

வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?
இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.

முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?
உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

Freitag, September 01, 2006

பெரிய இறால்களைத் தவிருங்கள்

கடல் உணவுகள் உடல் நலத்துக்கு மிகவும் நல்லவைதான். ஆனாலும் நாம் நினைப்பது போல விற்பனைக்கு வரும் அத்தனை கடலுணவுகளுமே இயற்கை முறையில் கடலில் வளர்ந்தவை இல்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஏறக்குறைய 20 வீதம் கடலுணவுகள் - கடலிலிருந்து - குளங்களுக்கும் செயற்கை முறையான நீர்த்தொட்டிகளுக்கும் இடம் மாற்றப் பட்டு, மரம் செடிகளுக்கு பசளை இடுவது போன்று மருந்துகள் கலந்த செயற்கை உணவுகள் கொடுக்கப் பட்டு வளர்க்கப் பட்டவையே எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் கோடைகாலப் பகுதியில் விற்பனைக்கு வந்த அத்தனை சீன இறால்களும் நண்டுகளும் விற்பதற்குத் தடை செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டனவாம்.

காரணம் - அந்த இறால்களுக்கும் நண்டுகளுக்கும் மனிதரின் உடலுக்குக் கெடுதி விளைவிக்கக் கூடிய தடைசெய்யப் பட்ட Antibiotic ஏற்றப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதாம்.

இந்த Antibiotic க்கு மனிதரின் எலும்புமச்சையை பழுதடைய வைக்கும் தன்மை உள்ளது தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போது சீனாவிலிருந்து ஐரோப்பியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் இறால் மீன் போன்றவற்றை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே இறக்குமதிக்கு அனுமதிக்கிறார்களாம்.

இருந்தாலும் இறால்களை வாங்கும் போது அதீதமான பருமனுள்ள பெரிய இறால்களை தவிர்க்கும் படி ஐரோப்பிய யூனியன் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மருந்து ஏற்றப் பட்ட இறால்கள்தான் அப்படி பெரிதாக வளர்கின்றனவாம்.

Vital - யேர்மனிய சஞ்சிகையிலிருந்து

Montag, August 28, 2006

மனம் தளராத முயற்சிகள்

அந்த இளைஞன் நன்றாகக் கார்ட்டுன் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு போய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. "இந்தக கார்ட்டுனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்" என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிட வில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டுன் படங்களை வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து படம் வரையச் சொன்னார்கள். அந்த அறையில் எலிகளும், சுண்டெலிகளும் மேலேயும் கீழேயும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இளைஞன் மனம் தளரவில்லை. "வேலை வேண்டாம்" என்று ஓடவில்லை. அங்கேயே உட்கார்ந்து படம் வரைந்தான். அங்கு ஓடிய ஒரு எலியையே கார்ட்டுனாக்கினான். அந்தக் கார்ட்டுன்தான் இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மிக்கி மவுஸ். அதை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான் அந்தக் கார்ட்டுனிஸ்ட்.

- ரஞ்சன் -
குமுதம் - 21.3.2005

மனம் தளராத முயற்சிகள் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.

Freitag, November 04, 2005

விநோத வழக்கு

உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.

ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.

1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.

தகவல் - தினமுரசு.

Dienstag, November 01, 2005

பின்னணிப் பாடகி பி.லீலா மரணம்

பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.

மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற வாராயோ வெண்ணிலாவே..., வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து..., ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற அருள் தரும் தேவ மாதாவே...' இன்னும், ஓரிடந்தனிலே…, வெண்ணிலவே தண்மதியே…, ராஜா மகள் ரோஜா மலர்... போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா.

இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாடலுக்கு முதலில் பாடுவதற்காக இசையமைப்பாளரால் அழைக்கப்பட்டவர் இந்த பி.லீலா. ஆனால் தன்னைவிட இந்தப் பாடலைப்பாட ஜானகியே சிறந்தவர் என்று அப்போது பரிந்துரைததாராம் லீலா. அந்த அளவுக்கு பரந்த மனது கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்த, 76 வயதான லீலா கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.

Montag, Oktober 31, 2005

பழைய கணக்கீட்டு முறைகள்

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

Dienstag, Oktober 18, 2005

Panagram வாக்கியம்

Panagram என்பது A இலிருந்து Z வரையுள்ள எழுத்துக்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வாக்கியம்.

A இலிருந்து Z வரையுள்ள 26 ஆங்கில எழுத்துக்களையும் உள்ளடக்கிய வாக்கியம்
Mr.Jock, T.V. quiz PhD, bags few Lynx.

33 எழுத்துக்களுடன்
The quick brown fox jumps over a lazy dog.

32 எழுத்துக்களுடன்
Pack my box with five dozen liquor jugs.

விசிறி

Fanatic என்பதிலிருந்து மிருதுவாக்கப்பட்ட வார்த்தை Fan.
அது தமிழில் விசிறி ஆகி விட்டது

Samstag, Juni 04, 2005

றேகனின் அந்த ஒரு பார்வை

இந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் ஒன்று வந்து போகும். Alzheimer நோயினால் பீடிக்கப் பட்டு 5.6.2004இல் மரணமடைந்த அமெரிக்காவின் 40வது ஜனாதிபதியான Ronald Reagan இன் உடல் வைத்திருக்கும் பெட்டியில் முத்தமிட்டு வழியனுப்பிய, 83வயதுகள் நிரம்பிய நான்சி றீகனின் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் அப்படியே சொல்கிறது.

தான் யாரென்பதையே வருடக்கணக்காக மறந்து போயிருந்த Reagan இறக்கும் இறுதித் தறுவாயில் அவரது படுக்கையின் ஒரு பக்கம் அவரது பிள்ளைகளான Patty யும், Ronyயும் அமர்ந்திருக்க மறுபக்கம் நான்சி அமர்ந்திருந்தார்.

இறக்கும் அந்தத் தறுவாயில், மூடியிருந்த Reagan இன் விழிகள் நான்சியினை நோக்கி ஒரு கணம் திறந்து மூடியிருக்கிறது. "Reagan இன் அந்த ஒரு பார்வை எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. என் மீது கொண்ட அன்பின் நிமித்தம் தனது கண்களை, என்னை நோக்கித் திறந்து விடை பெற்றிருக்கிறார்" என்று Nancy Reagan சமீபத்திய தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

52 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் அன்பு இறுக்கமானதாகத்தான் இருக்கும்.

Dienstag, Mai 31, 2005

அப்பிளைத் தனியாக வையுங்கள்.

எல்லா மரக்கறிகளையும் அல்லது எல்லாப் பழங்களையும் ஒரே பெட்டிக்குள்ளேயோ அல்லது
ஒன்றாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயோ வைக்கக் கூடாது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தக்காளிப் பழத்துடன் சேர்த்து வைக்கப் படும் மரக்கறிகள் விரைவில் பழுதடைந்து விடுவது போல அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

காரணம் அப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு பதார்த்தம் மற்றைய பழங்களை விரைவில்பழுக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால் அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்கள் விரைவாகப் பழுத்து பழுதடைகின்றன.

Donnerstag, Mai 19, 2005

விச ஊசியா? ஈரல் தானமா?


தீர்வு எப்படி அமையும்?


அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.

40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.

மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக உருவாகியுள்ளது. கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப் பட்டிருக்கும் ஜோன்சனின் சகோதரிக்கு அவசரமாக ஒரு புதிய ஈரல் தேவைப் படுகிறது. தனது ஈரலை தனது சகோதரிக்குக் கொடுக்க ஜோன்சனும் விரும்புகிறார். அவரது ஈரல் சகோதரிக்குப் பொருந்தும் எனவும் வைத்தியர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.

மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் இவரால் தனது ஈரலை தனது சகோதரிக்குத் தானம் செய்ய முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்குமா?

விசஊசி ஏற்றப்பட்டால் இவரது அனைத்து அவயவங்களும் செயலிழந்து விடும்.
இந்த இக்கட்டில் நீதிபதி என்ன முடிவு சொல்லப் போகிறார். நாளை வெள்ளி வரை காத்திருப்போம்.

Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.

Freitag, Dezember 10, 2004

எலிசபெத் ரெய்லர்

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள்.

திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து கொண்டார். இதில் பிரித்தானிய நடிகர் ரிச்சர்ட் பற்றனை மட்டும் இரண்டு தடவைகள் திருமணம் செய்து கொண்டார்.

இவரது அழகும் பட்டுப்போன்ற கவர்ச்சியான சிரிப்பும் ஆண்களை இவரது காலடியில விழ வைத்தன. ஆனால் இன்று..? இந்த வயதில் தனிமை வந்திருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள்.. என்று பலரும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் நெருக்கமாக இருந்து கண்ணீரைத் துடைத்து விடவோ, அணைத்துக் கொள்ளவோ வாழ்க்கைத் துணையென்ற ஒன்று, இன்று அவருக்கு இல்லை.

இவரது இன்றைய நெருங்கிய நண்பன் இவர் வளர்க்கும் 12வயது நிரம்பிய சிறிய வகை நாய் ஒன்றே. இவரது படுக்கையின் ஒரு தலையணையில் உரிமையுடன் படுதுத்துறங்கும் அந்த நாயின் பெயர் சுகர்.

உடல் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்து தளர்ந்து போயிருக்கிறார். இதயம் பலவீனப்பட்டு இருக்கிறது. முதுகெலும்பு வளைந்து நின்று முதுமையை அப்பட்டமாகச் சொல்கிறது. ஓடித் திரிந்த கால்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பலமிழந்து நிற்கின்றன. இவரைச் சுற்றி வைத்தியர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனாலும் இவரால் முதுமையை மட்டும் வெல்ல முடியவில்லை.

இருந்தாலும் "மிக அழகிய இனிமையான நினைவுகள் என்னிடம் உள்ளன.
அந்த நினைவுகளே முதுமையை வெல்ல எனக்குப் போதும்." என்கிறார் எலிசபெத் ரெய்லர்.

சந்திரவதனா
2.12.2004

Montag, November 29, 2004

Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

உலகிலேயே அதிக வயதான ஆண் Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.

அங்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தனது 114வது பிறந்தநாளுக்கு 12 நாட்கள் முன்பாக 19.11.2004 அன்று, நித்திரையிலேயே இறந்து விட்டார்.

தற்போதைய அதி கூடிய வயதான ஆண் மனிதர் Hermann Dörne. இவர் யேர்மனியின் Düsseldorf நகரில் வசிக்கிறார். இவருக்கு வயது 111.
ஆனால் இதே வயதில் இன்னும் 26 பெண்கள் வாழ்கிறார்கள் என நியூயோர்க்கைச் சேர்ந்த முதுமை பற்றிய ஆராய்ச்சிக்குழு அறியத் தந்துள்ளது.